
பராசக்தி: நடிகர் திலகம் அறிமுகமான படம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ரகசியமே. இதற்கு முன் வந்த படங்கள் எல்லாம் பாடல்களால் நிரப்பப்பட்டு, நடிகர்கள் தேமே என்று கேமரா முன் வந்து உணர்ச்சியில்லாமல் நான்கு வரி வசனம் பேசிவிட்டு போவார்கள். உதாரணத்திற்கு ஹரிதாஸ், சாந்தா சக்குபாய் என்று பல படங்கள் சொல்லலாம். பராசக்தி இந்த இலக்கணத்தை உடைத்து, கலைஞரின் அனல் பறக்கும் வசனங்கள், சிவாஜியின் ஒப்பற்ற நடிப்பு என்று ஒரு புதிய பரிமானத்தை கொடுத்தது. இதற்கு பிறகு வந்த படங்கள் எல்லாம் பராசக்தியையே பின்பற்ற தொடங்கின. சிவாஜி அவருக்கு பின் வந்த நடிகர்களுக்கு ஒரு இலக்கனம் வகுத்தார்.

பதினாறு வயதினிலே: ஸ்டுடியோக்குள்ளேயே சுருண்டு கிடந்த தமிழ் சினிமாவை நூறு சதவிகிதம் வெளிப்புற படப்பிடிப்புக்கு இழுத்து வந்த படம். ஹீரோ வில்லன் இமேஜை உடைத்து எல்லா கதாபாத்திரங்களும் இயல்பாக கதையோடு ஒன்றி நடித்த படம். வசனமாக இல்லாமல் காட்சிகளாக சினிமாவில் விஷயங்கள் சொல்லலாம் என்று முதலில் சொன்ன படம். இந்த படத்திற்கு பிறகு தான் கோடம்பாக்கத்திலிருந்து கேமராக்கள் பல வெளியே சென்று, கிராமங்களில் படங்களை எடுத்தது. இயக்குனர் இமயம் பாலச்சந்தரே இந்த படத்தின் பாதிப்பால், கோடம்பாக்கத்திலிருந்தது வெளியே வந்து தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை என நல்ல படங்கள் கொடுத்தார். தமிழ் சினிமாவில் என்பதுகளில் எடுக்கப்பட்ட சினிமாவிற்கு ஒரு முன்னுதாரனமாக இந்த படம் அமைந்தது.

ரோஜா: தொழில்நுட்பத்தால் இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவை இந்தியா முழுதும் திரும்பி பார்க்க வைத்த பெருமை மணிரத்னத்திற்கும் ஏ.ஆர் ரஹ்மானுக்கே சேரும். முக்கியமாக ஒளிப்பதிவு, ஒலிப்பதிவில் இந்த படம் ஒரு மைல்கல்லாய் அமைந்தது. முதன் முதலில் பழைய அலங்கார் தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன், எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கு, 'ஒரு வெள்ளை மழை' பாடலில் அந்த இசையும், ஒளிப்பதிவும் நம்மை காஷ்மீருக்கே அழைத்து செல்லும். தொன்னூறிலிருந்து இன்று வரை எடுக்கப்பட்ட, எடுக்கபடுகிற படங்களுக்கு ரோஜா தான் trendsetter.