Total Pageviews
Saturday, June 30, 2007
அங்கீகாரம்
நான் பள்ளியில் படிக்கும்போது எப்போதும் ஒரு அங்கீகாரத்திற்காக ஏங்கியிருக்கேன். என்ன மாதிரி அங்கீகாரம்? ஒன்னும் பெருசா இல்ல, என் பெயர் சொன்னால் மத்த செக்ஷன் பையன்களுக்கும் தெரியனும். முடிஞ்சா பள்ளிக்கே தெரியனும். நான் படிக்கும்போது அதுக்கு ரெண்டே வழிதான். ஒன்னு விளையாட்டில் பெரிய ஆளா இருந்து வெளியில பதக்கங்கள் வாங்கனும். அப்படி வாங்கினா, ஸ்கூல் அசெம்பிளி மீட்டிங்கில் மேடைக்கு கூப்பிட்டு பரிசு கொடுப்பார்கள், எல்லோரும் கைதட்டுவார்கள். இத விட்டா அடுத்த வழி, நல்லா படிச்சு முதல் மூன்று ரேங்க்குள் வாங்கனும். Half yearly, quarterly ரிப்போர்ட் கார்டை எப்போதும் AHM வகுப்புக்கு எடுத்து வந்து, முதல் மூன்று ரேங்க் வாங்கியவர்களுக்கு மட்டும் பெயர் சொல்லி கூப்பிட்டு கையில் கொடுப்பார். எல்லோரும் கைதட்டுவார்கள். மற்ற கார்டுகளை class teacherஇடம் கொடுத்துவிட்டு போய்விடுவார். அவரோ class leaderஇடம் கொடுத்து எல்லோருக்கும் கொடுக்க சொல்லிவிடுவார். எப்படியாவது முதல் மூன்று ரேங்க்கிற்குள் வாங்கிவிட வேண்டும் என்று நானும் ரொம்ப காலமாய் போராடினேன். ஒன்பதாவது படிக்கும்போது quarterly examல் அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தது. Answers sheet எல்லாம் வாங்கி பார்த்ததில் எப்போதும் மூன்றாவது ரேங்க் வாங்கும் மாணவனும் நானும் ஒரே total வாங்கியிருந்தோம். அப்படி இருக்கும்போது ரெண்டு பேருக்கும் சேர்ந்து மூன்றாவது ரேங்க் கொடுத்து, அடுத்து ஐந்தாவது ரேங்க் கொடுப்பார்கள். எனக்கு ஒரே சந்தோஷம் எப்படியும் இந்த முறை கைதட்டலோடு நாமும் AHM கையால் ரிப்போர்ட் கார்ட் வாங்கிடலாம். அந்த நாளும் வந்தது நானும் ஆவலோடு AHM அழைப்பார் என்று உட்கார்ந்திருந்தேன். அவர் வழக்கம் போல் முதல் ரேங்க், இரண்டாவது ரேங்க் எடுக்கும் மாணவர்களை கூப்பிட்டு அவர்களுக்கு ரிப்போர்ட் கார்டை கொடுத்தார், வழக்கம் போல் கைதட்டல்கள், மூன்றாவது ரேங்க், முதலில் என்னை கூப்பிடுவார் என்று நினைத்தேன், அவரோ மற்றவனை கூப்பிட்டார். அவனிடம் கார்டை கொடுத்துவிட்டு class teacherஇடம், 'மற்றதை நீங்கள் கொடுங்கள்' என்று கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார். எனக்கோ ஒரே ஏமாற்றம். பிறகு தான் தெரிந்தது, இரண்டு நாட்கள் முன்பே என்னோடு ஒரே total எடுத்தவன், தமிழில் ஒரு கேள்விக்கு ஆசிரியர் மார்க் கம்மியாய் போட்டிருக்கிறார் என்று வாதாடி அவரிடம் கேட்டு இரண்டு மார்க் கூட எடுத்துவிட்டான். எனக்கு நன்றாய் தெரியும் இந்த வேலையை நாங்கள் யாரும் செய்ய முடியாது. முதல் மூன்று ரேங்க் எடுப்பவர்கள் என்ன சொன்னாலும் முக்கால்வாசி ஆசிரியர்கள் தலையாட்டிடுவர். ஆகவே அந்த முறை எனக்கு நான்காவது ரேங்க். நான் அதிகமாய் போனது நான்காவது ரேங்க் வரையே. எனக்கு அழுகையாய் வந்தது. என்ன செய்வது. At least எங்கள் ஆசிரியர் என் முன்னேற்றத்தை கவனித்து ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம். அதுவும் இல்லை. வீட்டில் ரிப்போர்ட் கார்டை கொடுத்தேன். அப்பா வழக்கம்போல் முதல் ரேங்க் ஏன் வாங்கவில்லை என்று திட்டியபடியே கையெழுத்து போட்டார். ஒரு நேர்மையற்ற இரண்டு மதிப்பெண்ணில் என் அங்கீகாரத்தை பள்ளியில் இழந்தேன். இந்த ஒரு விஷயத்தில் தான் நான் அமேரிக்க கல்வி முறையை பாராட்டுவேன். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனின் தனித்திறமையை கொணர்ந்து அவனுக்கு ஊக்கத்தையும் அங்கீகார்த்தையும் வழங்குகின்றனர். கண்டிப்பாய் நம் கல்விமுறையில் மாற்றம் வேண்டும். வெறும் syllabus மாற்றம் மட்டும் போதாது.கல்வி முறையோ கற்பிக்கும் முறையோ மாற வேண்டும் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு மாணவனும் எப்படி உருவாக்க வேண்டும் என்கின்ற ஆசிரியர்களின் புரிதலில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)