Total Pageviews

Sunday, July 29, 2007

நான் படித்த காந்தி

சமீபத்தில் தான் மகாத்மா காந்தியின் சுயசரிதையான 'Stories of my experiments with truth' முழுவதும் படித்து முடித்தேன். தமிழில் சத்திய சோதனையாக வெளிவந்தது. என் நன்பர்கள் சிலர் அதை படித்து முடித்ததும் ஒரு சிலிர்ப்பு வந்ததாகவும், சில நாட்கள் உன்மையே பேசியதாகவும் சொல்வார்கள். எனக்கு அப்படி எல்லாம் ஒன்றும் தோன்றவில்லை. இந்த புத்தகம் அவர் பிறந்ததிலிருந்து 1920 வரை நடந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்திருக்கிறது. அதிலும் முக்கால்வாசி அவரின் தென் ஆப்பிரிக்கா வாழ்க்கையே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு விஷயம் இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, அவரின் சத்திய சோதனையின் ஒவ்வொரு வெற்றியையும் தோல்வியையும் ஒளிவு மறைவு இல்லாமல் பதிவு செய்ததேயாகும். சிறுவயதில் மற்ற எல்லோரையும் போலவே வாழ்க்கையின் பலம் பலவீனத்தோடு தான் காந்தியும் இருந்திருக்கிறார். வீட்டிற்கு தெரியாமல் நிறைய நாட்கள் மாமிசம் சாப்பிட்டிருக்கிறார், தண்ணி அடித்திருக்கிறார், ஒருமுறை விபச்சாரி வீட்டிற்கும் சென்றிருக்கிறார், ஆனால் அங்கு ஒன்றும் செய்யாமல் விபச்சாரியிடம் திட்டு வாங்கி வந்ததாக சொல்கிறார். தன் தந்தை சாக கிடக்கிற நேரத்திலும் தன் மனைவியை வலுக்கட்டாயமாக காமத்திற்கு உட்படுத்தியிருக்கிறார். அது பற்றி மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.

அவர் இங்கிலாந்து சென்று படித்தபோது, தென் ஆப்பிரிக்காவில் நேர்ந்த மாதிரி discrimination ஒன்றும் நடக்காதது ஆச்சர்யமாக இருக்கிறது. காந்தி இந்த சுயசரிதை எழுதும் வரை, ஆங்கிலேயர் ஆட்சி போக வேண்டும் என்ற கருத்து கொண்டவராக இருக்கவில்லை. ஆங்கிலேயர்களால் தான் இந்தியாவை ஆள முடியும் என்று நம்பியிருந்தார். அங்கிலேயர் ஆட்சியில் நடந்த கொடுமைகளை மட்டும் தான் சாத்வீக முறையில் எதிர்த்தார். அவரின் சாத்வீக முறையால் தான் அவரை மரியாதையாக நடத்தியது ஆங்கிலேய அரசு, அவர் கேட்டதற்கும் செவி சாய்த்தது. 1920 பிறகு தான் அவர் கொள்கையில் மாற்றம் தெரிந்தது, அதற்குள் அவர் பெரும் தலைவர் ஆகிவிட்டதால் இங்கிலாந்து அரசு அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.

நான் பள்ளியில் படித்த் பாடத்தில், லோகமான்ய திலகர் தான் காந்தியின் குருவாக இருந்தார் என்று சித்தரிக்க பட்டிருந்தது. ஆனால் உன்மையில் கோகலே தான் காந்தியின் குருவாக விளங்கினார். கோகலே பற்றி பல பக்கங்களில், அவர் எப்படி காந்தியின் தேசப்பற்று கொள்கைகளை உரமேற்றினார் என்று எழுதியிருக்கிறார். திலகர் பற்றி ஒன்று இரண்டு பக்கம் தான் எழுதியிருக்கிறார், அதிலும் அவரை விமர்சித்து எழுதியிருக்கிறார். படேல் பற்றி குறிப்பு இருக்கிறது, நேரு பற்றி ஒரு வரி கூட அவர் எழுதவில்லை. ஆனால் மோதிலால் நேரு பற்றி நிறைய எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து ராஜாஜி பற்றி எழுதியிருக்கிறார்.

பாரிஸ்டர் முடித்து இந்தியா வந்து வக்கீல் தொழிலில் அவருக்கு ஏற்பட்ட தோல்விகள் எல்லாம் ஒளிவு மறைவின்றி எழுதியிருக்கிறார். பம்பாய் ஹைகோர்ட்டில் தினமும் வழக்காடுவதை பார்க்க போய், அங்கேயே குறட்டை விட்டு தூங்கியதை படிக்கும்போது சிரிப்பு வந்தது. அவர் சுயசரிதையிலேயே எனக்கு பிடிக்காமல் போனது, சத்திய சோதனை என்கிற பெயரில் அவர் செய்த மருத்துவ சோதனைகள். அதற்கு ஒரு சமயம் தன் மகனையும் மரணத்தின் வாசலில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார். அவர் சட்டம் படித்த பாரிஸ்டர், சட்ட சோதனைகள் செய்யலாம், மனிதன் என்கின்ற முறையில் சமுதாய சோதனைகள் செய்யலாம், எந்த எண்ணத்தில் மருத்துவ சோதனைகள் செய்தாரோ. அவர் கொள்கைகள் பிடிக்காமல் அவரிடமிருந்து விலகிய மூத்த மகன் ஹரிலால் காந்தியை பற்றி சொல்லும்போது 'அவனை திருத்த முடியாதது ஒரு வருந்ததக்க தோல்வி' என்று குறுப்பிடுகிறார். ஹரிலால் காந்திக்கும், மகாத்மாவுக்கும் இருந்த் உறவை பற்றி 'gandhi my father' என்று ஒரு ஹிந்தி படம் வர இருக்கிறது.

காந்தியின் ஒவ்வொரு சோதனைகளிலும், அவர் மனசாட்சியின் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்கிறார். அதனால் ஒரு கொள்கையை எப்படி உறுவாக்கிறார், அந்த கொள்கைகளை எப்படி மற்றவர்க்கும் புரிய வைத்து அனைத்து தரப்பினரையும், ஆங்கிலேயர், ஜெர்மானியர், இந்தியர்கள் முதற்கொண்டு, எப்படி அரவனைக்கிறார் என்று படிக்கும்போது வியப்பாய் இருக்கிறது. முடிவாக ஒரு ஆச்சர்யமான தகவல், தென் ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர்க்கு எதிராக முதல் போராட்டமாக அவர் எடுத்து போராடியது, பாலசுந்தரம் என்கிற ஒரு தமிழர், கொத்தடிமையாக, தென் ஆப்பிரிக்கா வந்து தன் ஆங்கிலேய முதலாளியால் துன்புறுத்தபட்டதற்கு. காந்திக்கு தமிழ் நன்றாக புரியும் ஆனால் பேச வராது, ஒருமுறை தன் ஆசிரமத்தில் இருந்த தமிழ் குழந்தைகளுக்கு ஜி.யு போப் புத்தகத்தின் துணையோடு தமிழ் சொல்லி கொடுத்திருக்கிறார். தமிழும், தெலுங்கும் தான் சாவதற்குள் முழுமையாக கற்று கொள்வது அவருக்கு ஒரு கனவாகவே இருந்தது.