Total Pageviews

Tuesday, October 17, 2006

என் சினிமாக்கள் - 1

இந்த தொடரில் என்னை பாதித்த, நான் ரசித்த தமிழ் சினிமாக்கள் பற்றி சொல்ல போகிறேன். சிலர் சினிமா ஒரு சீரியஸான மெசெஜ் சொல்ல வேண்டும் என்று சொல்லுவார்கள், சிலர் அது பொழுதுபோக்கு விஷயமாக மற்றுமே இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள், என்னைக் கேட்டால் அது ஏதாவது ஒரு விஷயத்தில் நல்ல சினிமாவாக இருக்க வேண்டும். அப்படியானால் நல்ல சினிமாவின் இலக்கனம் தான் என்ன? ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், அது ஞாபகத்தில் தங்க வேண்டும். அப்படி என் ஞாபகத்தில் தங்கிய, என்னை பிரமிக்க வைத்த சினிமாக்கள் சிலவற்றை இந்த பகுதியில் எழுத உள்ளேன்.
மூன்றாம் பிறை:
இப்படி ஒரு தொடர் ஆரம்பித்தால், இந்த படத்தை பற்றி முதலில் சொல்வது தான் சரியாய் இருக்கும். சிறு வயதில் மற்ற பிள்ளைகள் போல சினிமாவை வெறும் பொழுதுபோக்காக மற்றுமே கண்டுகளித்த என்னை முதன் முதலில் கேமராவின் பின்னால் நடக்கும் விஷயங்களை அறிய தூண்டிய படம் இது. இந்த படத்தை பற்றி முதலில் என் அம்மா தான் எனக்கு பல விஷயம் சொல்லியிருந்தார். இதில் கமல் நடிப்பு அழகாய் இருக்கும், ஸ்ரீதேவி நன்றாய் நடித்திருப்பார், கண்ணதாசன் கடைசியாய் பாட்டு எழுதியிருப்பார் என்று பல விஷயங்கள் சொன்னார். ஆனால் அப்போது வீட்டில் வீடியோ ப்ளேயர் எல்லாம் இல்லை, அதனால் இந்த படத்தைப் பற்றி கேள்விப்பட்டு வெகு நாள் வரை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்தேன். அப்போழுதெல்லாம் டிடி தான் ஒரே சேனல், டிடியில் நல்ல படங்கள் பார்க்க வேண்டுமானால் ஞாயிறு கிழமை வரை காத்திருக்க வேண்டும். ஞாயிறு கிழமைகளில் மதியம், காது கேளாதவர் செய்தி முடிந்தபிறகு 1:00 மணி அளவில் தேசிய விருது வாங்கிய படங்கள் போடுவர். அடிக்கடி வங்க மொழி படங்கள், மலையாள மொழி படங்கள் வரும். எப்போதாவது தமிழ் படங்கள் வரும். பலகாலம் இது டிடியின் சதி என்று நினைத்திருந்தேன், பிறகு தான் தெரிந்தது தொன்னூறுகள் வரை, தேசிய விருதுகள் வாங்கிய தமிழ்ப் படங்கள் மிகக் குறைவு என்று. எனினும் ஞாயிற்று கிழமைகளில் பல நல்ல படங்களை பார்த்தேன். அத்திப்பூத்தாற் போல சில சமயம், வெள்ளி கிழமை நடுராத்திரி டிடியில் சில படங்களை திரையிடுவர். ஒரு சமயம் அப்படி வெள்ளி கிழமை இரவு மூன்றாம் பிறை காட்ட போகிறார்கள் என்று செய்தி கேட்டு. நான் மட்டும் ராத்திரி 12 மணிவரை விழித்திருந்து, கடைசி இந்தி செய்தி முடிந்து, அந்த படத்தை பார்த்தேன். முதன் முதலாய் ஒரு தமிழ் படத்தை பார்த்து நான் பிரமித்தது இந்த படத்தை தான். ஒளிப்பதிவில் ஒரு புதிய பரிணாமத்தை காட்டியிருப்பார் பாலுமகேந்திரா. கதை, திரைக்கதை, இசை, பின்னனி இசை, நடிப்பு என்று எல்லா விதத்திலும் அசத்தியிருப்பார். 'பொன்மேனி உருகுதே..' தான் படத்தின் திருஷ்டி பரிகாரம். பாடல்களில் நடிகர்கள் வாயசைக்காமல் வெறும் மாண்டேஜ் ஷாட்களில் கச்சிதமாக காட்டியது இந்த படத்தில் தான் என நினைக்கிறேன். இந்த படத்தில் பாடல் என்றால் பொதுவாக எல்லோருடைய ·பேவரைட் கண்ணே கலைமானே பாடலாக தான் இருக்கும். எனக்கும் இதுதான் பிடித்த பாடல், ஆனால் படத்தோடு பார்க்கும் போது நான் மிகவும் ரசித்தது 'பூங்காற்று புதிதானது..' பாடலை தான். பல்லவியில் ஒரு வெஸ்டர்ன் ஸ்டைலில் ஆரம்பித்து, சரணத்தில் ஹிந்துஸ்தானியில் குழைத்திருப்பார் இளையராஜா. இந்த பாடலின் நடுவில், ஸ்ரீதேவியின் பாவாடை நுனி ஊட்டி ரயில் தண்டவாளத்தில் மாட்ட, எதிரே ரயில் நெருங்கி வர அப்போது ஒரு இசை போட்டிருப்பார் ராஜா, எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம், முன்னேயே அப்படி ஒரு காட்சியை யோசித்து பாலுமகேந்திரா கேட்டிருப்பாரோ, அல்லது அப்படி ஒரு ஷாட் எடுத்து அதை அழகாய் அந்த பாடலில் பொருத்தியிருப்பாரோ. மிக அழகான ஒரு காட்சி அது.

No comments: