ரகுபதி - வயது 6 மணி நேரம்..
ரகுபதி பிறந்து அழுத களைப்பில் சுவாமிநாதன் கையில் கிடந்தான். சோர்வு இருந்தாலும், கண்ணில்
ஈன்ற பெருமை தெரிய அருகில் மீனாட்சி. டாக்சியில் ஏறியவுடன் மீண்டும் ரகுபதியின் பிஞ்சு முகத்தை ஒருமுறை பார்த்தான் சுவாமிநாதன்.
"என் ராசா....நான் தவங்கிடந்து பெத்து எடுத்த தங்கமே....எங்க அப்பன போலவே ராஜகள...நீ வேனாம்
பாரேன் மீனாட்சி என் மவன் பெரியவனா ஆனதும் இந்த சீமையே கட்டி ஆளப் போறான்"
உடனே ஒரு வறட்சியான சிரிப்பு சத்தம் முன்னிருந்து கேட்டது. சுவாமிநாதனும் மீனாட்சியும் நிமிர்ந்து பார்க்க ரியர் வியூ மிரரில் டாக்சி ட்ரைவர் இவர்களை பார்த்து
சிரித்துக் கொண்டிருந்தான்.
"ஏம்பா சிரிக்கிற" சுவாமிநாதன் குழப்பத்துடன் கேட்டான்
ரகுபதி - வயது 2
"கூ.. கூ..." ரயில்வே ஸ்டேஷனில் ரகுபதி. தூரத்தில் வரும் புகைவண்டி கரி என்ஜினைப் பார்த்து, வாயில் கட்டை விரலை வைத்தபடி கூவிக்கொண்டிருந்தான்.
"ஏங்க கேளுங்க... நேத்து அவன் அப்பத்தாக்கிட்ட கூட சொன்னாங்க.."
சுவாமிநாதன் வயர் கூடையை பிடித்தபடி தன் பேரனையே பார்த்துக்கொண்டிருக்கும் தன் தாயைப் பார்த்துக் கேட்டான்
"நெசமா தானா"
"ஆமால சாமிநாதா...என் கையை நாடி பாக்கிறா மாதிரி புடிச்சிகிட்டே சொன்னாங்கிறன்...'நான் டாக்டராவேன் அப்பத்தா'ன்னு நெசமாத்தான் சொன்னான்"
"என் தங்கமே" சுவாமிநாதன் ரகுபதயை அள்ளி வாரி முத்தம் மழை பொழிந்தான். ரகுபதியின் கவனமெல்லாம் அவன் அருகே வந்து கொண்டிருக்கும் ரயில் என்ஜின்னிடமே இருந்தது.
"என் ராசா... எங்க சொல்லு நீ பெரியவனா ஆனதும் என்னவா வருவே"
"கூ...கூ..." ரகுபதி சுவாமிநாதனை கவனித்தாற் மாதிரி தெரியவில்லை.
"சொல்லுப்பா... என் தங்கம் இல்ல...என் செல்லம் இல்ல..சொல்லுப்பா"
"நான் பெரிவனா ஆனா..ஆங்..ஆங் வந்து...வந்து..."
"ம்ம் சொல்லுப்பா"
"நான் அதோ அந்த என்ஜின் ஓட்ட போறேன்..."
ரகுபதி - வயது 10
"உங்க ஒவ்வொருத்தருக்கும் நீங்க என்னவா ஆகப்போறீங்கன்னு ஒரு ஆசை இருக்கும்...அந்த ஆசைய அடைய நீங்களே ஒரு லட்ச்சியத்த வளத்துக்கனும்.. கல்விக்கூடங்கிறது அந்த லட்சியத்த நீங்க அடைய உங்கள நீங்களே தயார் செஞ்சுக்கிறதுக்கான ஒரு பயிற்சி களம்" ஆறாம் வகுப்பின் தமிழ் டீச்சரின் முதல் நாள் வகுப்பு.
"எங்க சொல்லுங்க நீங்க ஒவ்வொருத்தரும் பெரியவனா ஆனா என்னவா ஆகபோறீங்க"
"டாக்டர், இன்ஜினியர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஸயின்டிஸ்ட்" சொல்லி வைத்தாற் போல் எல்லா மாணவர்களும் முறை மாற்றி சொன்னனர். ஒரு மாணவன் "எங்க தலைவர போல பெரிய ஸ்டார் ஆவேன் டீச்சர்" என்று சொல்ல டீச்சரிடம் ஒரு முறைப்பு வந்தது. ரகுபதியின் முறை வந்தது
"நான் மிலிட்டிரியில சேரப் போறேன் டீச்சர்..சேர்ந்து நம்ம நாட்டு எதிரிய எல்லாம் சுட்டு தள்ளப்போறேன்" சதீஷ் ஆச்சர்யமாக தன் நன்பன் ரகுபதியை பார்த்தான்.
"என்னடா நேத்து வரைக்கும் பெரிய என்ஜினியராக போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்த.. இன்னைக்கு என்னடா ஆச்சு"
"நேத்து ஒரு இங்கிலிஷ் படம் பாத்தேண்டா.. ஸ்டலோன்னு மிலிட்டரியில சேர்ந்து என்னமா சன்ட போட்டார் தெரியுமா...இவ்வளவு பெரிய கன்னு, எதிரிங்க பாம்
போடறாங்க, ப்ளைட்ல இருந்து சுடறாங்க, ஆனா நம்ம ஸ்டலோன்னு ஒரு குண்டு கூட படாம அவங்க எல்லாரையும் சுட்டாரு பாரு சூப்பர்டா...மிலிட்டரியில சேரலாம்டா..அப்பதான் கன்னு, பாம் எல்லாம் தருவாங்க" கண்கள் படபடக்க ரகுபதி விவரித்தான்.
ரகுபதி - வயது 15
"ரகுபதி...congrats..கிரிக்கெட்டுல உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு..இந்த மாதிரியே நல்லா விளையாடனும்.. நீ தான் அடுத்த டெண்டுல்கர்" கிரிக்கெட் கோச் சொன்ன
வார்த்தைகள் ரகுபதியால் நம்ப முடியவில்லை. வெற்றிக்களிப்புடன் கோப்பையை வாங்கி வீட்டிற்கு வந்தான். ரகுபதி ஒரு கையில் கோப்பையுடனும் மறுகையில் கிரிக்கெட் மட்டையுடனும் வீட்டினுள் நுழைந்தான். உள்ளே சுவாமிநாதன் கண்ணில் கோபம் தெறிக்க ரகுபதியை பார்த்தான், அவன் கையில் ரகுபதியின் ப்ரொக்ரஸ் கார்ட்.
"ஏண்டா காடு கரைய வித்து உன்னைய படிக்க வச்சா...என்னடா மார்க் வாங்கியிருக்குற"
"இல்லப்பா...அடுத்த தடவ கண்டிப்பா..."
"எலெ நிறுத்துடா...இதயேதாண்டா போன தடவையும் சொன்னே...இந்த முறையும் அஞ்சு சப்ஜெக்டலையும் பெயிலாயி இருக்குற.....இந்த வருஷம் SSLC தெரியும்ல..."
ரகுபதி தலையசைத்தான்
"உன்னெடுத்த பசங்க எல்லாம் ஒழுங்கு மருவாதையா வீடே கெதின்னு படிக்கிறானுவோ..நீ என்னடான்னா ஊர் சுத்திகிட்டு திரியுறவ...அது என்னடா கையில"
"கிரிக்கெட்டுல இன்னைக்கு நான்தாம்பா man of the match"
"உன்னைய படிக்க சொன்னா... என்னடா கிரிக்கெட் வேண்டி கெடக்குது...நீ என்ன சொன்னாலும் திருந்த மாட்டே...இரு உன்னைய..." ரகுபதி கயில் இருந்த கோப்பைய
வாங்கி தூர எறிந்தான், அவன் மட்டையை பிடுங்கி ரகுபதியை அடிக்க கை ஓங்கினான். ரகுபதி இரு கைகளாலும் அழுதவாறே தன் தகப்பனை அடிக்க விடாமல் தடுத்தான். இரண்டு அடி அடித்தும் கோபம் தீராதவனாய் சுவாமிநாதன் கிரிக்கெட் மட்டையை ஒங்கி தூணில் போட்டு உடைத்தான். மீனாட்சி ரகுபதியை அனைத்து அவனை
தேற்றிக்கொண்டிருந்தாள்.
ரகுபதி - வயது 17
ரகுபதி திரும்பத் திரும்ப நன்றாய் தேடிப் பார்த்தான். ம்ஹ¥ம்..அவன் நம்பர் தெரிந்தபாடில்லை. அவன் நன்பர்களெல்லாம் தங்கள் நம்பரை பார்த்த சந்தோஷத்தில் வீட்டிற்கு
விரைந்து கொண்டிருந்தனர். ப்ளஸ் டூ ரிசல்ட் வந்துவிட்டது. இது ரகுபதிக்கு ஒன்றும் ஆச்சர்யம் தரவில்லை. இருந்தாலும் வீட்டிற்கு போனால் இந்த அப்பனை எப்படி
சமாளிப்பது. தீவிர யோசனைக்கு பிறகு தன் திருட்டு சிகரெட்டை அனைத்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய் வீட்டை நோக்கி நடந்தான். வீட்டின் முன் ஒரு ஐம்பது அடி வந்து கொண்டிருக்கும் போது, சுவாமிநாதன் குரல் தெருவெங்கும் கேட்டது, கூடவே மீனாட்சியின் அழுகுரல்.
"இன்னைக்கும் வரட்டும் அவன்... புள்ளையாடி பெத்து இருக்க புள்ள... ஒன்னுத்துக்கும் உருப்படாத பய"
"எம்புள்ளைய ஒன்னும் செய்யாதீங்க"
சுருட்டிய தினத்தந்தியுடன் வீட்டினுள் நுழைந்தான் ரகுபதி.
"வாங்க தொர... என்ன ஜில்லாவில்லே மொத மார்க்காமே..." நக்கல் + கோபத்துடன் சுவாமிநாதன்.
"அப்பா...கோபப்படாதீங்க... நான் தான் எனக்கு படிப்பு வரல..படிப்பு வரலன்னு சொன்னேனே...இப்ப நீங்க டென்ஷனாகி என்ன ஆகப்போவது"
"டேய் படிக்காம என்னடா பன்ன போற"
"ஏதாவது செய்யறன்... உலகத்துல பொழைக்க வழியா இல்ல"
ரகுபதி - வயது 25
அந்த தனியார் மருத்துவமனையின் வாசலில் அந்த வெள்ளை அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது. அதன் பின் கண்ணாடியில் மஞ்சள் நிறத்தில் "raghu cabs" என்று ஸ்டிக்கர் மின்னிக்கொண்டிருந்தது. மெல்ல அந்த தம்பதியினர் அம்பாசிடர் கார் கதவை திறந்து உள்ளே கைக்குழந்தையுடன் உட்கார்ந்தனர்.
"ட்ரைவர் போகலாம்பா"
"சரி சார்" சிக்னல் போட்டு ரகுபதி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
"ஜ்ஜூக்குட்டி...செல்லக்குட்டி....மங்கலம் நாம ஆசப்பட்ட மாதிரியே சிங்கக்குட்டி பொறந்திருக்கான்டி.....என்னால தான் ஆக முடியல...இவனை எப்படியாவது ஒரு கலெக்டரா ஆக்கி காமிக்கிறேன்"
ரகுபதி சிரித்தான், தம்பதியினர் நிமிர்ந்து பார்த்தனர்.
2 comments:
superaa irukku kadhai...
history repeats!!!
my god ranjith... extra ordinary short story... this could make an excellent short film...
Post a Comment