சும்மா பொழுது போகட்டுமே என்று தான் இந்த படத்தை பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் படம் முடிய அசந்து விட்டேன். தமிழில் இப்படி ஒரு sensible காதல் கதையை பார்த்ததில்லை. வித்தியாசமான திரைக்கதை, வசனம் மற்றும் காட்சியமைப்பிலும் படத்தை நிறையச்செய்த சசிக்கு பாராட்டுகள். திரையில் ஹீரோவுக்கு டூப் போடும் ஸ்டண்ட்மேனாக வரும் ஹீரோ, ஆர்ட்ஸ் காலேஜ் படிக்கும் ரசனைமிக்க ஒரு ஹீரோயின், இப்படி இரு கதாபாத்திரம், இருவருக்கும் காதல் என்று typical தமிழ் பட இயக்குநர் படத்தை எடுத்திருந்தால், தனக்கு பொருந்தவே பொருந்தாத ஹீரோவுடன், ஹீரோயினுக்கு கண்டதும் காதல், ஹீரோயின் அப்பாவிடம் நாம் பார்த்து புளித்துபோன ஏழை பனக்கார காதல் டயலாக்குகள், நாலு பைட் கடைசியில் சுபம் என மசாலா தூவி கைமா பன்னியிருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட cliche எதுவும் இல்லாமல், காட்சிக்கு காட்சி வித்தியாசமாய் படத்தை கொண்டு சென்றிருக்கும் விதம் சூப்பர்...
'ரிஸ்க்' பாஸ்கராக ஜீவா, ராம் படத்திற்கும் இதற்கும் பயங்கர இம்ப்ரூவ்மெண்ட். லாக்கப்பில் போலீசார் அடிப்பதற்கு முன்பே அடிவாங்கியது போல் ரியாக்ஷன் கொடுத்து விழ, ரகளயான ஓப்பனிங். லோக்கலாக பேசும் பேச்சு, பான்பராக் போடும் ஸ்டண்ட்மேனாக பாடி லாங்க்வேஜ் என்று நடிப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். இமேஜ் வளர்க்கிறேன் பேர்விழி என்று பஞ்ச் டயலாக், அதீத ஹீரோயிஸம் என்று சிக்காமல் இப்படியே நாலு படம் நடித்தால் சூர்யா பாதையில் செல்லலாம்.
ஹீரோவின் ரசனையும், ஹீரோயின் ரசனையும் எப்படி ஒட்டாமல் இருக்கிறது என்று சொல்லுகிற காட்சியமைப்பு எல்லாம் பன்ச். சந்தியா பீச்சில் செய்த மணல் சிலையை பேசிக்கொண்டே அதன் அருமை புரியாமல் ஜீவா காலால் உதைப்பதும், மோனாலிசா படத்தை பார்த்து "இது உங்க பெரியம்மாவா" என்று கேட்பதும் சில உதாரணங்கள்.
வசனங்களும் ஆங்காங்கே நச். டைட் டி சர்ட், கழுத்தில் தொங்கும் கத்தி செயின்கள் என்று வரும் ஜீவாவை பார்த்து, சந்தியா "கொஞ்சம் டீசண்டா வரலாமே" என்று கேட்க "நாங்க வில்லனா தெரியற வரைக்கும் தான் எங்களுக்கு பொழைப்பு" என்று ஜீவா சொல்வது ஒரு உதாரணம்.
ஒவ்வொரு காட்சியையும் நாம் சினிமா பானியில் ஒரு மாதிரியாக ஊகிக்க ஆனால் ப்ராக்டிக்லாக அதை எடுத்திருப்பது தான் இந்த படத்தின் பெரிய ப்ளஸ். பஸ் ஸ்டாப்பில் பஸ் வராமல் சந்தியா காத்திருக்க, அங்கே வரும் ஜீவா ஒரு பஸ்ஸை நிறுத்துவதற்கு அதன் முன்னால் போய் பாய, இதை பார்த்து ஹீரோயினுக்கு காதல் வரும் என்று பார்த்தால், அவர் போய் ஜீவாவை அறைகிறார் "உன் ரிஸ்க்க எல்லாம் சினிமாவுல்ல வச்சிக்கோ", சரி பதிலுக்கு ஹீரோ அப்படியே போய் ஒரு சோக பாட்டு பாடுவார் என்று பார்த்தால் பதிலுக்கு ஜீவாவும் சந்தியாவை பளார் என்று ஒரு அறை "உன்ன இம்ப்ரெஸ் பன்ன எனக்கு இதுதான் தெரியும், மத்தவங்க மாதிரி இங்கிலிஷ் பேசி வாயில மவுத் ஆர்கன் வாசிக்க தெரியாது" என்று பொரிந்து தள்ள, என ஆங்காங்கே சர்ப்ரைஸ். characterisation திரைக்கதைக்கு நல்ல வலு சேர்க்கிறது.
காமெடிக்கு விவேக் வடிவேலுவிடம் எல்லாம் போகாமல், ஒரு குள்ளரை வைத்து காமெடி செய்திருப்பது புதுமை. என்னதான் குள்ளராக இருந்தாலும் அவரின் குள்ளத்தனத்தை வைத்து ஓவராக காமெடி செய்திருக்கிறார்கள் என்று நினைத்தால், கடைசியில் அவர் கடன் வாங்கும் காரணத்தை சொல்லி நம்மை கலங்க வைக்கின்றனர். படத்தின் ஒரே குறை வலுக்கட்டாயமாக தினிக்கப்பட்ட பாடல்கள் தான், ஆனால் அதிலும் இரண்டு மூன்று பாடல் மாண்டேஜ் ஷாட்டுகளாக கதையை நகர்த்துவதால் போரடிக்கவில்லை. மொத்தத்தில் டிஷ்யூம், ஒரு யதார்த்தமான 'காதல்' படம் போல் இது நடைமுறை காதல் கதை.
No comments:
Post a Comment