தீபாவளி நெருங்குகிறது, இந்த வருடம் தீபாவளி ஷாப்பிங்கை நேற்று சிக்காகோ சென்று முடித்து திரும்பினேன். அமேரிக்காவில் இந்த வருடம் தான் உண்மையான தீபாவளி கொண்டாட போகிறேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் இந்த வருடம் என் அண்ணன் அண்ணியோடு ('ஜெய்'யும் அவர் மனைவியும்) தீபாவளி கொண்டாட
ஒஹாயோவிற்கு (ohio) அடுத்த வாரம் செல்கிறேன். 2002லிருந்து நான் அமேரிக்காவில் இருப்பதால் கடந்த மூன்று வருடம் தீபாவளிக்கு என் குடும்பத்துடன் இருக்க
முடியவில்லை. நான் இல்லாததால் என் வீட்டாரும் அவ்வளவாக இப்போதெல்லாம் தீபாவளி கொண்டாடுவதில்லை.
தீபாவளி என்றால் எனக்கு பல ஞாபகங்கள். சிறுவயதில் தீபாவளியென்றால் ஒரு மாதம் முன்பாகவே நானும் என் அண்ணனும் பரபரப்பாகி விடுவோம். எப்போதும் கண்டிப்போடு இருக்கும் எங்கள் தந்தை, தீபாவளி பட்டாசில் மட்டும் அதை தளர்த்திவிடுவார். பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பே, அப்போது இருந்த விலைவாசி திண்டாட்டிலும் எங்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ருபாய்க்கெல்லாம் பட்டாசு வாங்கி தந்திருக்கிறார். ஒரு முறை, எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது, பலத்த மழையிலும் எங்களை பாரீஸ் கார்னர் கூட்டிச்சென்று எங்கள் விருப்பத்திற்கு பெரிய அட்டைப் பெட்டி நிறைய பட்டாசு வாங்கி அதை தன் தலையில் சுமந்தபடியே ஆட்டோ பிடித்து வீட்டிற்கு கொண்டு வந்தார். கட்டு கட்டாக அந்த பட்டாசுகளை பார்ப்பதே எனக்குக் கொள்ளை இன்பம், பல சமயம் அதை வெடிப்பதற்கே மனசு இருக்காது. பட்டாசு வாங்கியவுடன், முதல் வேலையாக நானும் என் அண்ணனும், அந்த பட்டாசுகளை தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத்திற்கு பிரித்து வைத்துவிடுவோம். முக்கால்வாசி தீபாவளிக்கு எங்கள் தந்தை எங்களை குடும்பத்துடன் திருவாரூரிற்கு பக்கத்திலிருக்கும் எங்கள் சொந்த ஊரிற்கு கூட்டிச் சென்றுவிடுவார். ஊரில்தான் பெருன்பான்மையான தீபாவளிகளை கொண்டாடுவோம். ஊர் சென்றவுடனே என் அம்மா, பாட்டி மற்றும் சின்னம்மாவுடன் பலகார ப்ரோக்ராம்களை ஆரம்பித்துவிடுவார். சமயத்தில் அம்மாவிற்கு தலைவலி எடுத்துவிடும், அதனால் தலையைப் பிடித்து ஓய்வு எடுத்துகொண்டிருப்பார், அப்போதெல்லாம் நான் "அம்மா எழுந்திரு...போய் பலகாரம் செய்" என்று தொல்லைப்படுத்த்வேன். என் தொல்லை தாங்காமலே என் அம்மா எல்லா பலகாரமும் செய்து விடுவார். அம்மா பலகாரம் செய்யும்போதெல்லாம் கண்டிப்பாய் யாரையும் சமையற்கட்டு பக்கம் அனுமதிக்க மாட்டார். பலகாரத்தை யாரும் சாமிக்கு படைக்கும் முன் எச்சில் படுத்த கூடாது என்பார். ஆனால் நான் மட்டும் திருட்டுதனமாய் அங்கு நுழைந்து சிலவற்றை எடுத்து சாப்பிட்டு விடுவேன். பலநேரம் இதை கண்டும் கானாததை போல் விட்டுவிடுவாள் அம்மா. ஊரில் தீபாவளியன்று விடியற் காலை நான்கு மனிக்கே எழுப்பிவிடுவர். என் தந்தை எல்லோர் தலையிலும் எண்ணெய் வைத்து
விடுவார். பாட்டி கொல்லைப்புறத்தில் பெரிய அண்டாவில் எல்லோருக்கும் வெந்நீர் போட்டுக் கொண்டிருப்பாள். குளிர் எடுத்தால் நான் வெந்நீர் வேண்டுவேன், அவ்வளவு குளிர் இல்லையென்றால் நான் சித்தப்பா மற்றும் என் அண்ணனும், எங்கள் ஊரில் உள்ள ஐயனார் குளத்தில் போய் ஒரு முங்கு முங்குவோம். ஆஹா, அந்த விடியற் நேரத்தில், கதிரவன் எட்டிப்பார்க்கும் வேளையில் குளத்தில் நீராடுவது எவ்வளவு ஆனந்தம். குளித்தவுடன் வீட்டிற்கு போய், அப்பா மஞ்சள் இட்டு கொடுக்கும் புது துணிமனியை வாங்கி
போட்டுக்கொண்டு எல்லோரும் சாமி கும்பிடுவோம். உடனே தலைவாழை இலை போட்டு திபாவளி விருந்து. எப்படியும் இலையில் 20 ஐயிட்டம் இருக்கும். அப்பாவிற்கு தெரியாமல் சிலவற்றை இலையிலெ வைத்து மடித்து எழுவேன். எழுந்தவுடன் வாங்கிய பட்டாசுகளை பிரித்து நானும் அண்ணனும் வெடித்துத் தள்ளுவோம். காலை மணி எட்டு ஒன்பதுக்குள் தீபாவளி முடிந்துவிடும். இப்போது இதை நினைக்கும் நேரம், விருமாண்டி படத்தில் கமல் சொல்லும் ஒரு வசனம் தான் ஞாபத்திற்கு வருகிறது "சந்தோஷம்னா என்னன்னு அத அனுபவிக்கும்போது மனுஷனுக்கு தெரியர்தில்ல".....
2 comments:
naanum idhe category ranjith.. pataasa vedikave manasu vaaradhu.. paathuthe iruppen..
good post...malarum ninaivugal konduvandhadarkku nanri!
thanx priya
Post a Comment