
இந்த வாரம் இந்த கலை படைப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தவமாய் தவமிருந்து சேரன் செதுக்கி இருப்பது ஒரு சினிமாவை அல்ல, யதார்த்தத்தின் பிம்பங்களை. சென்ற முறை ஒரு காதலனின் ஆட்டோகிரா·பை நமக்கு கான்பித்தவர் இந்த முறை பெற்ற பிள்ளைகளுக்காகவே தன் வாழ்க்கையை தியாகம் செய்யும், நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது சில சமயம் பார்க்க மறக்கும் ஒரு தகப்பனின் பையோகிரா·பியை நமக்கு காட்டுகிறார். இது வரை நாம் பார்த்த மிகைப்படுத்தபட்ட சினிமாத்தனம் துளிக்கூட இல்லாமல் இயல்பான வாழ்க்கையை கேம்கார்டரில் படம் பிடித்து கான்பிப்பது போல் (ஒளிப்பதிவு HD technology கொண்டு செய்யப்பட்டு இருக்கிறது) பயனிக்கிறது கதை. கதையுடன் கச்சிதமாய் பொருந்தும் பாத்திரத்தேர்வு யதார்த்தத்தை மேலும் மெருகூட்டுகிறது. ராஜ்கிரன் கிராமத்தில் வாழும் நடுத்தர தகப்பனாய் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். கண்டிப்பாய் ஒரு தேசிய விருதுக்கு அங்கீகரிக்கபட வேண்டிய நடிப்பு. தன் மகன் ஓடிப்போய் திருமணம் செய்து குழந்தைப்பெற்று கஷ்டப்படும்போது, அவனை பார்க்க வந்து வீட்டில் தரையை பார்த்து, உணர்ச்சியற்று ஒரு பார்வை பார்க்கிறாரே...வாவ்...என் கண்ணில் ஈரம் முட்டி நின்றது. இந்த படத்தில் உள்ள பல காட்சிகளை என் வாழ்வில் நடந்த சம்பவத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறேன்.
1) ராஜ்கிரன் தன் குழந்தைகளுக்கு தீபாவளி சாமான்கள் வாங்க காசில்லாமல் தினறும்போதும் மகன் கேட்ட பட்டாசுகளை கடையில் பார்க்கும்போதும், என் தந்தை என்னையும் என் அண்ணனையும் அழைத்து பாரீஸ் கார்னரில் பட்டாசுகள் வாங்கி அதை எங்களுக்காக தோளில் சுமந்து வந்தது மற்றும் ஒரு தீபாவளியில் முதல் நாள் இரவு வரை எங்களுக்கு துனி வாங்க காசு இல்லாமல் நடுராத்திரியில் எங்கேயோ கடன் வாங்கி எனக்கும் என் அண்ணனுக்கும் நாவல்டி ரெடிமேட்சில் துணி வாங்கியது.
2) ராஜ்கிரன் மூத்த மருமகள் தன் பெண் குழந்தைக்கு மாமனார் வைத்த தெய்வானை என்னும் பெயரை மாற்றி குஷ்பு என்று மாற்றும் போது, என் அம்மா என் தாத்தா எனக்கு துரைராசு என்று வைத்த பெயரை மாடர்னாக இருக்க வேண்டும் என்று ரஞ்சித் குமார் என மாற்றியது.
3) ராஜ்கிரன் தன் மூத்த மகனை பாலிடெக்னிக் சேர்க்க வட்டி கடைகாரரிடம் கூனி குறுகி நின்ற போது, நான் ஆறாம் வகுப்பு சேர்வதற்கு, சாந்தோம் பள்ளியில் என் அப்பா என்னை சேர்க்க பிரின்ஸிபாலிடம் கூட்டி செல்ல, அவர் what is your father? என்று கேட்ட கேள்வியை புரியாமல் நான் தவறாய் என் அப்பாவை கை காட்ட, அதனால் எரிச்சலைடைந்த அந்த பிரின்ஸிபால் டொனேஷன் தொகையை ஏற்ற என் தந்தையின் முகத்தில் தோன்றிய கவலை ஞாபகத்திற்கு வருகிறது.
4) ராஜ்கிரன் சேரனை இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்க்க பணத்தை வைத்து கொண்டு அலையும் போது, என்னை பாலிடெக்னிக் சேர்க்க நானும் என் தந்தையும் நேர்முகத் தேர்விற்கு காத்திருக்க, பக்கத்தில் கிராமத்திலிருந்து வந்த ஒரு அப்பா பையனுக்கு ·பீஸ் கட்ட வைத்து இருந்த பணத்தில் 100 ரூபாயை தொலைத்து அதை கவலையோடு அதை தேடியது ஞாபகத்திற்கு வருகிறது.
பிள்ளைகளுக்காக வாழ்க்கையை தொலைக்கும் தகப்பன்கள், அவர்களுக்கு பிள்ளைகள் காட்டும் நன்றி என்று இன்றைய வாழ்வில் நடக்கும் நிஜங்களை காட்டியது நம்மை அறையவைக்கிறது. இந்த படத்தின் மற்ற குறைகளை கூற தேவையில்லை, உன்மை என்னவென்றால் நான் அந்த அளவுக்கு படத்தின் குறைகளை கவனிக்கவில்லை, கவனிக்க முடியாதபடி படத்தோடு ஒன்றி விட்டேன். ஆறு பாட்டு, நாலு சண்டை, அதீத ஹீரொயிசம், வின்னிங் ·பார்முலா என ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே சிக்கிக் கொண்டி¢ருக்கும் தமிழ் சினிமாவில், இந்த மாதிரி ஒரு படம் வருடத்திற்கு ஒரு முறையாவது வந்தால், தமிழ் சினிமாவின் நாடித் துடிப்பு சாகாமல் இருக்கும்.
இந்த மாதிரி ஒரு பெற்றவர்களை நாம் கவனிக்க மறந்தால் அல்லது மறுத்தால், நாம் வேரோடு வெகுதூரம் விலகி வந்துக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
6 comments:
sooperb.. ur best post till date...
padam paaka sama aasaiya kelapiteenga...arumaiyaa vimarsanam ezhuthareenga!!!
keep it up..
Check out my blogspot when u get time..
I've just checked priya. Thanks a lot. Yaarum ippadi periya manasu panni adhuthavanga blog'a vilambarapadutha maataanga. Romba nandri.
superb post thalaiva. came thru priya's blog.
came throught Priya's blog.
nalla thirai vimarsannam.
atilum ungaludaiya appa ungalukku paniya naanmikalum solurathu romba nalla irukku. intha padatha pakkarathukku romba avala irukku, This is the best family movie.
U studied in Santhome!? I was there too... circa 1990 :-)
Post a Comment