
நகரம் விழாக்கோலம் பூசியிருந்தது. பேராசிரியர் ஆத்மா பிறந்த மண்ணில் பிறந்ததற்கு நகரவாசிகள் பெருமிதம் கொண்டனர். எல்லா ஊடகங்ககளையும் ஆத்மாவின் கண்டுபிடிப்புகளும் அதனால் நிகழும் சங்கிலி நிகழ்வுகளும் பிரதான இடம் பிடித்திருந்தன. இதனால் உலகமே ஒரு மறுமலர்ச்சி அடைந்தது. போலி சாமியார்கள், கல்ட் கோஷ்டிகள், மடாதிபதிகள் பாதி பேர் தலைமறைவாகிவிட்டனர், மீதி பேர் மக்களால் துரத்திக் கொல்லப்பட்டனர், மிச்சமிருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சில காலம் முன் நாத்திகம் பேசிய நாட்டில் கட்டப்பட்ட கோயில்கள் அனைத்தும் இடிக்கப்பட்டன. மற்ற நாடுகளில் இருந்த மத ஸ்தாபனங்கள் எல்லாம் வரலாற்று சின்னங்கள் என்பதால் அரசாங்ககளால் பாதுகாக்கப்பட்டன. அப்படி என்ன ஆத்மா கண்டுபிடித்துவிட்டார், 'கடவுள் இல்லை' என்பதை தான். அவரின் தொடர் ஆரிஜின் டியரிகள், இதுவரை கடவுள் பேயரால் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டன. உலகம் இவரின் கருத்துக்களை ஒத்துக்கொண்டன.
நகரின் மையத்தில் இருக்கும் பிரும்மாண்ட மைதானம். மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள். எங்கு திரும்பினாலும் ஆத்மா மேலே பார்த்த மாதிரி தெரியும் படங்கள். உலகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லாம் இன்று ஒரே மேடையில் அத்மாவை கௌரவிக்க இருந்தனர். எல்லோரும் ஆத்மாவை புகழ்ந்து தள்ளினார்கள். "ஆத்மா தான் உலகத்தின் பார்த்த ஈடு இனையற்ற விஞ்ஞானி", "உலகத்தின் சாபக்கேட்டை போக்க வந்த மேதை", "மதங்களால் இனி நிகழவிருந்த பல போர்களையும், அழிவுகளையும் தடுத்த..." தலைவர்கள் அடுக்கிக் கொண்டே போனார்கள். எல்லாவற்றையும் சலனமற்ற ஒரு புன்னைகையுடன் கேட்டு கொண்டிருந்தார் ஆத்மா. முடிவாக பேச வந்தவர் தலைவர் ஒருவர் "மனித குலத்தையே காக்க வந்த இன்னொரு அவதாரம் தான் ஆத்மா, இனிமேல் நமக்கெல்லாம் அவர்தான் கடவுள்" என்றார். இதை கேட்டு மட்டும் அத்மாவின் முகத்தில் கவலை படர்ந்தன. முடிவாக பேச வந்த ஆத்மா "என்னை கடவுள் என்று கூறுவது அபத்தமான ஒன்று...என் வாழ்க்கையேல்லாம் அப்படி ஒன்று இல்லை என்பதை நிரூபிக்கவே அர்பனித்திருக்கிறேன்...எனவே இனி தயவு செய்து யாரும் அப்படி பேசாதீர்கள்.." வேண்டுகோள் வைத்தார்.
********
அது ஒரு மலை உச்சி, மேலே அத்மா நகரத்தை பார்த்துக்கொண்டிருந்தார். இரவு நகரத்தை போர்த்திக்கொண்டிருந்தது. கடந்த ஒரு மாதமாய் உலகம் கண்டிராத அமைதி. "எல்லாம் சுபம், சொல்ல செய்திகள் இல்லை" என்று பத்திரிகைகள் பல பக்கங்ளை குறைத்தன. இதெற்கெல்லாம் காரணமாய், உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் அத்மாவோ எதுவுமே தெரியாதது போல் நகரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு ஒளி வட்டம் அத்மா இருந்த இடத்தை சூழ்ந்தது, உச்சிவெயிலில் தெரியும் சூரிய ஒளி அந்த இரவில் ஆத்மா இருந்த இடத்தினில் மட்டும். ஆத்மா அந்நாந்து மேலே பார்த்தார், அவர் கண்ணில் பயமில்லை.
"நன்றி ஆத்மா, நான் சொன்ன பணியை பிழையின்றி முடித்துவிட்டாய்"
"பிதாவே என்ன இது..நீங்கள் சொன்னதையெல்லாம் தானே நான் செய்தேன்..பரம்பொருள் நீ எனக்கு நன்றி சொல்வதா...தந்தையே இனி நீங்கள் எப்போது எங்களுடன் வருவீர்கள்"
"இனி உங்கள் உலகத்திற்கு நான் தேவையில்லை...எந்த தந்தையும் தன் பிள்ளை தன் பெயரால் அடித்து கொண்டு சாவதை விரும்பமாட்டான். நான் தானே உங்களுக்கு பிரச்சனை..அதனால் தான் என்னையே அழித்துக் கொண்டேன். இனியாவது நான் உங்களுக்கு விட்டு செல்லும் மனிதம் என்னும் கடவுளை கான முயற்சி செய்யுங்கள்..வருகிறேன்" ஒளி மறைந்தது.
4 comments:
Excellent...
very very impressive!!
2nd one is too good.
அற்புதமான கதையோட்டம்.ஆனாலும்
முடிவு கடவுள் இருக்கிறாரா?இல்லையா? காலாகாலமாக கேட்கப்பட்ட அதே கேள்வி அதே பதில்.
யாருக்கும் இது தெரியாதென்பதைதவிர
மிஞ்சியிருபது போமியில் எதுவுமில்லை. தமிழ்சித்தன்
Post a Comment