நான் முதன் முதலில் பார்த்த ஆங்கில பட அனுபவம் எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. இரண்டாவதோ மூன்றாவதோ படித்துக்கொண்டிருந்தேன், அப்பா தேவிபாரடைஸ் தியேட்டரில் ஒரு நல்ல ஆக்ஷன் படம் வந்திருப்பதாய் அறிந்து, முதலில் அதை தான் பார்த்து, 'குழந்தைகளை கூட்டிச் செல்லும் படம் தான்' என்பதை உறுதி செய்து எங்களையெல்லாம் கூட்டிச் சென்றார். நைட்ஷோ போனோம், முதல் முறையாய் லி·ப்டையும் அப்போது தான் பார்க்கிறேன். ஸீட்டில் போய் உட்கார்ந்ததும் எனக்கு குளிர் தொற்றிக்கொண்டது, உடம்பை இறுக்கி அனைத்தபடி பல்லில் தந்தியடித்தபடியே படத்தை பார்க்கிறேன். படம் பெயர் ஏதோ thunder என்று வரும், சரியாய் ஞாபகம் இல்லை. படத்தில் ஹீரோ சில்வெஸ்டர் ஸ்டல்லோன் போல் தலையில் ரிப்பன் கட்டி, பெரிய பெரிய குழாய் துப்பாக்கிகள் வைத்து, செந்தில் ஒரு படத்தில் சொல்வது போல் தோளின் குறுக்கில் செறுகி வைத்த மூக்குப்பொடி டப்பாக்கள் போல புல்லட் பெல்ட் மாட்டி, புல்டோசர் போன்ற வாகனத்தில் வந்து எதிரிகளை வதம் செய்தார். ஏன் செய்தார் என்பது ஞாபகம் இல்லை, அடித்த குளிரில் நான் பாதி படத்தின் மேல் தூங்கிவிட்டேன். அதன் பிறகு நானும் அண்ணனும், அரையாண்டு, காலாண்டு லீவுக்கெல்லாம் அப்பாவை வீடியோ ப்ளேயர் வாடகைக்கு வாங்கி வரச்சொல்லி, snake in the monkey shadows, monkey in the eagle shadows..என்று எல்லா விலங்கினத்தின் பேரிலும் வரும் ஆங்கில-சைனா-குங்பூ படங்களை வாங்கி பார்ப்போம். இது போன்ற படங்கள் எல்லாவற்றிலும் கதை ஒரே மாதிரியே தான் இருக்கும். ஹீரோவின் குடும்பத்தை pantன் மேல் கருப்பு பாவாடை கட்டிய வில்லன் கொன்றுவிடுவான், ஹீரோ நேரே வெள்ளை பாவாடை கட்டிய மாஸ்டரிடம் "மாஷ்டர்..டீச் மீ..குங்பூ" என்று மூச்சு விடுவதை விட வேகமாய் பேசி, கஷ்டப்பட்டு குங்பூ கற்று, மீண்டும் கருப்பு பாவாடை கட்டிய வில்லனை அடித்து நொறுக்கி பழிவாங்குவான். அப்பாவின் நன்பர் ஒருவர் ஜாக்கிச்சான் பட ரசிகர். எந்த ஜாக்கிச்சான் படம் வந்தாலும் தன் இரு மகன்களையும் தியேட்டருக்கு கூட்டிச் சென்று படத்தை பார்த்துவிடுவார். என்ன தான் ஆக்ஷன் படமானாலும், ஜாக்கிச்சான் படங்களிலும் ஒன்றிரண்டு விவகார காட்சிகள் வரும், காமெடியாக தான், அதனால் அவர் எப்போதும் மகன்களை தன் இருபுறமும் உட்கார வைத்து, அவர்களின் தோளில் மேல் கைபோட்டுக்கொன்டே படம் பார்ப்பார். படத்தில் இசகுபிசகாக காட்சிகள் வந்தால் உடனே கைகளை தூக்கி மகன்களின் கண்களை மூடிவிடுவார்.
ஒருமுறை சாந்தம் தியேட்டரில் குழந்தைகள் விரும்பும் ஆங்கிலப்படம் ஒன்று ஓடுவதாக அப்பா கேள்விபட, அதை பார்க்க ஒரு ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் ஷோவிற்கு டிக்கெட் ரிசர்வ் செய்தார். கடைசி நிமிஷத்தில் அப்பாவால் படத்திற்கு எங்களோடு வர முடியவில்லை, உடனே அம்மாவை எங்களையெல்லாம் அழைத்து போகச் சொன்னார். அம்மாவிற்கோ ஒரே பதற்றம், இதற்குமுன் எங்களை தனியாய் ஆங்கிலப் படத்திற்கு கூட்டி சென்றதே கிடையாது. சம்சாரம் அது மின்சாரம், மனதில் உறுதி வேண்டும் போன்ற நல்ல தமிழ் படத்திற்கு தான் கூட்டி சென்றிருக்கிறார். சத்யம் காம்ப்ளெக்ஸ் அடைந்ததும் அங்கிருந்த போஸ்டர்களை பார்த்தார், அப்படி ஒன்றும் வில்லங்கமான போஸ்டர்கள் அங்கு கானோம். அங்கு நின்றுகொண்டிருந்த நேரமெல்லாம் டென்ஷனாகவே இருந்தார் அம்மா. கொஞ்ச நேரம் கழித்து என் அண்ணனிடம் "உள்ள போய் படம் போஸ்டர்ல எங்கேயாவது கேப்பிடல் ஏ சுத்தி சர்க்கிள் போட்டிருக்கான்னு பாத்துகிட்டு வா" என்று அவனை உள்ளே அனுப்பினார். அவன் திரும்பி வந்து
"அப்படி ஒன்னும் இல்லம்மா"
"நல்லா பாத்தியா"
"நல்லா பாத்துட்டேன்"
அம்மாவிற்கு இன்னும் பதற்றம் குறையவில்லை, திரும்பவும் அண்ணனை உள்ளே போய் பார்க்கச் சொன்னார். அண்ணன் இந்தமுறை முரண்டு பிடித்தான், வழக்கம் போல் அம்மா பார்வையால் அதட்டி அவனை போக வைத்தார். அண்ணன் வந்து
"நல்லா பாத்துட்டேன்மா...சத்யம் தியேட்டர்ல ஓடற படத்துல தான் அந்த மாதிரி போட்டிருக்கு" என்று போஸ்டரை கைகான்பித்தான். சத்யம் தியேட்டரில் அப்போது 'fly' என்ற படம் ஓடிக்கொண்டிருந்தது, அதிலும் கூட மனிதர்களின் படங்கள் கானோம், ஒரு பெரிய ஈயின் படமே இருந்தது. இந்தமுறை அம்மா கையில் வைத்திருந்த டிக்கெட்டை அண்ணனிடம் கொடுத்து
"போய் அந்த டிக்கெட் கவுண்டர்ல...இந்த டிக்கெட்ட காமிச்சு, சாந்தம் தியேட்டர்லதான் நாம பாக்க வந்த படம் ஓடுதான்னு கேட்டுட்டு வா" என்று சொன்னார்.
அண்ணனிற்கு 'ஏன் தான் வந்தோம்' என ஆகிவிட்டது, கவுண்ட்டரில் போய் அம்மா சொன்னதை உறுதிபடுத்திக்கொண்டு திரும்பினான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு வழியாய் தியேட்டரில் போய் உட்கார்ந்தோம். திரையில் அஸ்ஸாமின் ஆதிவாசி நடனமும், கூடவே பாரதப் பிரதமர் விஜயமும், கருப்பு வெள்ளையில் நியூஸ் ரீலாய் ஓடுக்கொண்டிருந்தது. அது முடிந்து வீக்கோ டருமெரிக் விளம்பரம் வந்தது. அப்போது அம்மா எங்களிடம் திரும்பி "நான் சொல்லும்போது கண்ண மூடிக்கனும்...புரியுதா" என்று எங்களுக்கு instructions கொடுத்தாள். நல்லவேளை பாக்யராஜ் படம் போல சில்லறை மாற்றி வைக்கவில்லை. படம் ஆரம்பித்து டைட்டில் முடிந்து ஒன்றிரண்டு காட்சிகள் வரையில் அம்மா டென்ஷனாகவே இருந்தார். பிறகு படத்தில் இன்வால்வ் ஆகி எங்களோடு மிகவும் ரசித்து பார்த்தார். படம் முடியும் வரையில் அம்மாவின் instructionsக்கு வேலையில்லாமல் போயிற்று. இப்படி அம்மாவுக்கு ஒரு பெரிய மிஷனாய் அமைந்த அந்த படத்தின் பெயரை நான் இன்னும் சொல்லவில்லையே, அது வேறொன்றும் இல்லை, மெக்காலே கல்க்கின் நடித்து வெளிவந்த 'ஹோம் அலோன்' பார்ட் ஒன் தான் அந்த படம்.
2 comments:
nice narration dude
keep going
adapaavi intha storyellaaam sollaveyilliye.... i know u man..... intrstin to read all te blogs... i put te link in som foldr n frgot about it.... saw it 2day.... will write more aftr readin more
Post a Comment