Total Pageviews

Wednesday, January 18, 2006

கொஞ்ச நேரம்

'அப்பாடா பொங்கல் படம் ஒன்று பார்த்தாச்சு" என்று சொல்லலாமென்று தான் நினைத்தேன், ஆனால் "ஐயயோ ஏண்டா பார்த்தோம்" என்று சொல்லும்படி ஆகிவிட்டது. நம்ம 'தல' அஜீத்தின் பரமசிவன் பார்த்தேன். சந்திரமுகி என்னும் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் பி.வாசு, பாதியாய் எடை குறைத்த அஜீத் இவர்கள் கூட்டனியில் ஒரு கலக்கல் படம் கொடுத்திருப்பார்கள் என்று ஆர்வமாய் இருந்தேன், கடவுள் புன்னியத்தில் அப்படியெல்லாம் ஒன்றும் செய்யாமல் இதுவரை நாம் பார்த்து புளித்துப்போன கோலிவுட் கோமாளித்தனங்கள் எல்லாம் கொட்டி ஒரு சொதப்பலை கொடுத்திருக்கிறார்கள். 'சிறையில் இருக்கும் மரண் தண்டனை கைதி ஒருவனை வெளியில் கொண்டு வந்து, தீவரவாதிகளை தீர்த்துக்கட்டுவது' என்று சொன்னால் சுவாரஸ்யமாய் தோனும் கதை தான், ஆனால் அதை எப்படியெல்லாம் கொடுமையாய் சொல்லமுடியுமோ அப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். முதலில் பி.வாசு அவர்களுக்கு, அரை செஞ்சுரி சினிமா எடுத்த நீங்கள் இன்னும் திரைக்கதை என்றால் என்ன என்பது தெரியாமல் இருப்பது அதிசயமே. முடிந்த வரையில் கதையை காட்சியாய் சொல்வது தான் திரைக்கதை, அதைவிட்டு கதாபாத்திரங்கள் எப்போதும் முழம் நீளத்துக்கு லெக்சர் கொடுப்பது ஏன். மேலும் உங்கள் சந்திரமுகி மெகா ஹிட்டாகி 200 நாள் கடந்து ஓடிவிட்டது, அதற்கு நீங்கள் இந்த படத்தில் காட்சிக்கு காட்சி மெனக்கெட்டு விளம்பரபடுத்துவது ஏன். 'தல' அஜீத்... நந்தா, காக்க காக்க, கஜினி படங்களுக்கு உங்களை தான் முதலில் அனுகினார்கள் என்று படித்தேன், அதையெல்லாம் விட்டுவிட்டு இதில் நடிப்பதற்கு உங்களுக்கு அட்வைஸ் செய்த அந்த எதிரி யார் சார்?
ஆக்ஷன் படம் என்று நம்பி படம் பார்த்தால் ஒரே தமாஷாய் இருக்கிறது. வழக்கம் போல் ஒரு கேனச்சி வேடத்தில் லைலா வருகிறார். அமேரிக்க FBI ரேஞ்சுக்கு பிரகாஷ்ராஜ் போலீஸ் துறையை தன் கையில் வைத்துக்கொண்டு ஏதேதோ செய்கிறார். நாட்டில் தலை போகிற விவகாரங்கள் பல இருக்க, தன் வீட்டில் வேலை செய்த ஒரு பாட்டியம்மாவின் பேரன் அஸ்தியை கண்டுபிடிக்க CBI ஆபிசராக ஜெயராம் துப்பு துலக்கி ஹீரோவையும் துரத்துகிறார். காமெடிக்கு விவேக் ம்ஹ¥ம் ஒன்னும் சொல்வதற்கு இல்லை. இருக்கிற விஷயங்கள் போதாதென்று புதுசாக ITயை வேறு இழுக்கிறார்கள், தீவரவாதிகளுக்கு இவர்களே சொல்லி கொடுப்பார்கள் போலிருக்கு. அடிக்கடி கம்ப்யூட்டரை காட்டி, அசிங்கமான க்ராபிக்ஸ் சேர்த்தால் புதுமையான ஆக்ஷன் படம் தரலாமென்று நினைத்திருக்கிறார்கள். வாசு சார், மசாலா படத்தில எல்லாம் இருக்கனும்ங்கிறது வாஸ்தவம் தான், அதுக்காக டிவி சீரியல் எபிசோட் போல காட்சி விட்டு காட்சி காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் காமிக்கனும்னு அவசியம் இல்ல. நல்ல மசாலா படம் எடுக்கனும்னா போய் தரணி படம் பாருங்க. ஒரே ஒரு விஷயம் மட்டும் இந்த படத்தில் ரசிக்கும்படியாய் இருக்கு அது க்ளைமாக்ஸில் அஜீத் போடும் ஸ்டண்ட். தான் ஒரு ரேஸ் வீரர் என்பதற்கு சாட்சியாய் தூப் போடாமல் நடித்திருக்கிறார். இதை பார்த்த பிறகு ஆதியை பார்க்க பீதியாய் இருக்கு.

No comments: