அமெரிக்காவில் ஒரு நன்பருடன் அவர் அக்கா வீட்டிற்க்கு சென்றிருந்தேன். அவர்களின் மூன்று வயது மகனை பற்றி பேச்சு வந்தது. அப்போது அவர்கள் ஒரு சம்பவம் சொன்னார்கள், ஒருமுறை அந்த சிறுவன் ஏதோ சேட்டை செய்திருக்கிறான், அவனை மிரட்ட அடிப்பதுபோல் கையை ஒங்கியிருக்கிறார்கள் அப்போது அந்தப் பையன் "அடிக்க வந்தால் 911 போன் செய்வேன்" என்று சொல்ல, அவர்கள் மிரண்டு விட்டார்கள்.
இதுபோல் நான் அந்த சிறுவன் வயதில் இப்படி "அடித்தால் போலீசுக்கு சொல்லிடுவேன்" என்று மிரட்டியிருக்க முடியாது. ஏனென்றால் நான் வளர்ந்ததே ஒரு காவலர் குடியிருப்பில்தான், அதுவும் ஒரு காவல் நிலையத்தின் பின்புறம் இருக்கும் காவலர் குடியிருப்பில். நான் வளரும்போது வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, அடி உதை என்பது மிகவும் பரிச்சயமான விஷயம். எங்கள் அப்பா என்னையும் அண்ணனையும் அடிப்பதற்க்கென்றே ஒரு லத்தி வைத்திருந்தார். நானும் அண்ணனும் எந்த விஷயத்தில் சன்டைப்போட்டாலும் அந்த லத்தியை மறைக்கும் விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாய் இருப்போம். பொதுவாகவே போலீஸ்காரர்கள் எப்படி குற்றவாளிகளை அடிப்பார்கள் என்று எனக்கு தெரியும். எங்கள் ப்ளாக்கின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தால், காவல் நிலையத்தில் குற்றவாளிகளை அடிப்பது நன்றாய் தெரியும். சினிமாவில் பார்ப்பது போல் குற்றவாளியை உட்கார வைத்து, மேலே ஹைவால்டேஜ் லைட் போட்டு அடிக்க மாட்டார்கள். அடி என்பது பல வைகைப்படும், முதலில் விசாரனைக்கு கூட்டி வந்து மேல் அதிகாரி விசாரனை செய்ய கான்ஸ்டபிள்கள் அடிப்பார்கள், அப்போது குற்றவாளி எல்லோர் மேலும் சத்தியம் செய்வது கேட்கும். இரண்டாவது வகை, லாக்கப்பில் இருக்கும் எல்லா கைதிகளையும் வெட்ட வெளியில் கூட்டி வந்து, கைகளை மேலே நீட்டச்சொல்லி ஒரு கட்டையை இடுக்கில் வைத்து சரமாரியாக அடிப்பது, இப்படி அடிக்கும்போது விசாரனையெல்லாம் இருக்காது, இது பொதுவான அடி. மூன்றாவது வகை, இரவில் சில பிரத்யேக குற்றவாளிகளை தலைகீழ் தொங்கவிட்டு அடிப்பார்கள், பொதுவாக இதை லாடம் கட்டுவது என்பார்கள். இதில் குற்றவாளியில் உள்ளங்காலில் மட்டும் அடிப்பார்கள். இப்படி அடித்தால் குற்றவாளியால் குறைந்தது ஆறு மாதத்திற்கு சரியாய் நடக்க முடியாது. இப்படியெல்லாம் அலுவலகத்தில் அடியுடன் பழகியவர்கள், வீட்டிற்கு வந்து பிள்ளைகள் தவறு செய்தால், கண்ணே மணியே என்று கொஞ்ச மாட்டார்கள், ஒரு கணம் தான் காவல் நிலையத்தில் அடித்த குற்றவாளியை பார்ப்பது போல் பிள்ளைகளை பார்ப்பார்கள், அதனால் இங்கேயும் பெரும்பாலும் லத்தியே பேசும். எங்கள் வீட்டில் நானும் அண்ணனும் தான் அப்பாவிடம் அடி வாங்கியிருக்கிறோம். தங்கையை அப்பாவோ, அம்மாவோ அடித்து ஞாபகம் இல்லை. ஒருவேளை அவள் பெரும்பாலும் சேட்டைகள் செய்யாமல், நாங்கள் செய்யும் சேட்டைக்கு சாட்சியாய் இருந்ததால் அடித்ததில்லையோ! நானாவது அப்பா அடிக்க கையை ஓங்குவதற்கு முன்னாலேயே, அடிப்பட்டதாய் அழுது, பெரும்பாலும் அடியிலிருந்தோ அல்லது குறைந்த அடியோடு தப்பித்திருக்கிறேன், அண்ணந்தான் எப்போது அப்பா அடித்தாலும், வெள்ளையனை எதிர்த்த தியாகிபோல் நெஞ்சை நிமிர்த்தி நின்று, தர்மடி வாங்குவான். இதுபோல் குழந்தைகளை தண்டிப்பதில் பலருக்கு இப்போது உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் வளர்ந்த அந்த சூழ்நிலையில் இது போன்ற தண்டனைகள் தான் நாங்கள் ஒழுக்கத்துடன் வளர உதவின. இல்லையென்றால் நான் வேறுமாதிரி போயிருப்பேன், அதற்கான அத்தனை வழிகளும் காவலர் குடியிருப்பில் இருந்தன. நான் ஒருபோதும் அப்பாவை குறை சொல்ல மாட்டேன். இத்தனைக்கும், அங்கு இருந்த வீடுகளில் எங்கள் வீட்டில் தான் தண்டனைகள் சற்று குறைவாய் இருந்தன. மற்றவரெல்லாம் பல லத்திகளையும், பெல்ட்டுகளையும் தின்றவர்கள். எங்கள் வீட்டின் மேல் வீட்டில் ஒரு பையன் இருந்தான், என் அண்ணன் வயதுதான் இருக்கும் அவனுக்கு. இருமுறை வீட்டை விட்டு ஓடியவன். இரண்டாவது முறை ஊட்டிக்கு நன்பர்களுடன் சென்றவன், ஒரு மாதம் கழித்துதான் வந்தான். அவன் வந்த இருநாள் வீடு அமைதியாக இருந்தது. மூன்றாம் நாள் இரவு விடிய விடிய அவன் அலறல் அங்கிருந்த எல்லோர் தூக்கத்தையும் கெடுத்தது. என்ன நடந்தது என்பதை எங்களால் ஊகிக்க முடிந்தது. அதன்பிறகு அவன் முற்றிலும் மாறிப்போனான். யாரிடமும் கலக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் நல்ல பிள்ளையாய் மாறிவிட்டான்.
2 comments:
குழந்தைகளை அடிப்பதில் கூட ஒரு அளவு வேண்டும். மிகுந்த வன்முறை அவர்களை வன்முறையாளனாகவே அல்லது குற்றவாளியாகவே மாற்றிடும் சாத்தியம் அதிகம்.
நான் ஒத்துக்கொள்கிறேன் சந்தோஷ், குழந்தைகளை அடிப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் நான் வளர்ந்த காலத்தில் இப்போது போல் விழிப்புனர்ச்சி இல்லை. பெற்றோர்கள் குழந்தைகளை அடிப்பதில் இல்லை பிரச்சனை, கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை. ஆனால் நம் ஊரில் பள்ளிகளில் நடக்கும் அநியாயம் தான் கண்டிக்கதக்கது. அது பற்றி தான் இந்த பதிவுன் இரண்டாம் பாகத்தில் எழுத உள்ளேன்.
Post a Comment