தலைப்பை பார்த்ததும் ஏதோ நான் வகுப்பில் எப்படி வெட்டி பொழுதை கழித்தது பற்றி எழுத போகிறேன் என நினைத்து விட வேண்டாம். classஐ கட் அடித்து ஊர் சுற்றுவது பற்றி தான் பேச போகிறேன், class கட் அடிப்பதன் தூய தமிழாக்கம் தான் 'வகுப்பு வெட்டி' (ஏதோ டாக்டர் ராமதாஸின் தமிழ் அகராதி சேர்ப்புக்கு என்னால் முடிந்த சேவை).
கல்லூரி காலத்தில், வகுப்பை வெட்டி ஊர் சுற்றுவதை எங்களின் கல்லூரி கடமைகளில் ஒன்றே என நினைத்து வந்தோம். சில விரிவுரையாளர்களின் அ'று'வுரையை தவறவிடுவதே பல சமயம் நமக்கும், நம் அறிவுக்கும் சாலச் சிறந்தது. மேலும் நாங்கள், கல்லூரியின் கூரையின் கீழ் பயில்வதை விட, வானம் என்னும் பொதி மரத்தடியில் உலகம்
பயில்வதையே விரும்பினோம் (கவியரசுக்கு நன்றி....வகுப்பை வெட்டி சினிமா பார்த்ததை இப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க முடிகிறது). இப்படியெல்லாம் வகுப்பு வெட்டுவதன் பயனை நான் கல்லூரியில் தான் கண்டறிந்தேன் என நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும் அதற்கு பிள்ளையார் சுழி போட்டது என் பள்ளிப் பருவத்தில்.
நான் ஒன்பதாவது படித்து கொண்டிருந்த சமயம், ஒரு நாள் எங்கள் தமிழாசிரியர், ஆசிரியர் ஓய்வறைக்கு வரச்சொல்லி ஓலை அனுப்பினார். ஓய்வறைக்கு வரச்சொல்லி உதைக்க நான் அப்படி என்ன தவறு செய்தேன் என யோசித்தபடியே அங்கு சென்றேன். அங்கு ஆசிறியருடன் ப.ஜெயக்குமார் மற்றும் ஜே.ஜெயக்குமார் (மற்ற செக்ஷனில் படிக்கும் பையன்கள்) நின்று கொண்டிருந்தனர்.
"நாளக்கு இன்னொரு பள்ளியில் பாரதியார் நினைவு பேச்சு போட்டி இருக்கிறது, அதற்கு உங்கள் மூவரையும் தேர்வு செய்து இருக்கிறோம், உன்னால் போய் பேச முடியுமா"
ஆசிரியர் என்னிடம் கேட்டார். நான் அப்படி ஒன்றும் பெரிய பேச்சாளன் இல்லை, எங்கள் வகுப்பிலிருந்து எப்போதும் இளங்கோவை தான் இது மாதிரியெல்லாம் அனுப்புவார்கள். அந்த பள்ளிக்கே தெரியும் அவன்தான் மிக நன்றாக் பேசுவான் என்று. ஆசிரியர் என்னிடம் கேட்டபோது எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது, கண்டிப்பாய் இளங்கோவை
கேட்டிருப்பார்கள், அவன் மறுத்திருப்பான். இருந்தாலும் இவ்வளவு தூரம் அவர் அழைத்து கேட்டது எனக்கு பெருமையாகவே இருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன்.
"நாளைக்குள்ள தயார் செஞ்சுடுவீங்களா" நாங்கள் மூவரும் ஒருசேர தலையாட்டினோம்.
"சரி அப்ப நாளைக்கு காலையில AHM கிட்ட அனுமதி கடிதம் வாங்கி தரேன், அத வாங்கிட்டு நீங்களே போயிடுங்க, அரசினர் தொட்டம் உள்ள ஒரு பாலர் பள்ளியிலே தான் போட்டி"
"சரி சார்"
"நல்லா பேசுங்கபா.. நம்ம பள்ளி பேர காப்பாத்துங்க"
"கண்டிப்பா சார், பரிசோட திரும்பி வரோம்" ப.ஜெயக்குமார் நம்பிக்க பொங்க சொன்னான். எனக்கு ஒரெயொரு ஆச்சர்யம், அப்படி ஒன்றும் நான் பேச்சுப் போட்டியில்
ஜெயிக்கவில்லையேனும் (அது ஒரு தனி கதை. அடுத்த சி.நே.சி.ஞா'வில் சொல்கிறேன்) , அடிக்கடி கலந்து கொள்வதால் என்னை தேர்வினார்கள், ஜெ.ஜெயக்குமார்
உன்மையிலே தமிழார்வன், ஒன்பதாவது வரை எங்களோடு ஆங்கில மீடியத்தில் படித்து, தமிழ்ப் பற்றினால் பத்தாவதில் தமிழ் மீடியம் சேர்ந்தவன், மேலும் பாரதி வெறியன், எல்லா மாறுவேட போட்டியுலும் பாரதி வேடம் தான் போடுவான் (ஒரு சமயம், கடைசி நொடியில் போட்டியில் அவசரமாய் நுழைந்து, ஒட்டிய மீசை பாதி தொங்கியும், கட்டிய வேட்டி பாதி அவிழ்ந்ததயும் பாராமல் உனர்ச்சிமயமாக பேசி முதல் பரிசை தட்டிச் சென்றான்), ஆக அவன் தேர்வானதிலும் ஐயமில்லை. ஆனால் இந்த ப.ஜெயக்குமார் எந்த இட ஒதுக்கீட்டில் தேர்வானான் என்பது தான் எனக்கு இன்று வரை விளங்காத மர்மம். அவனுக்கு நன்றாய் பேச வராது என நான் சொல்லவில்லை, இன்று அரசியல்
மேடையில் பேசும் பேச்சாளர்கள் அளவுக்கு நன்றாய் பேசக்கூடியவன் ஏனென்றால் தமிழின் அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பொழிப்புரையுடன் அறிந்தவன், ஆனால் தூய தமிழ் பேச்சுப் போட்டிக்கும் அவனுக்கும் வெகுதூரம். என்ன செய்ய, ஆசிரியர் தேர்வு செய்துவிட்டார் அவனோடு பேச்சு போட்டிக்கு போய்தான் ஆகனும்.
மாலை வீட்டிற்கு வந்து, மறுநாள் போட்டிக்கான குறிப்புகள் எடுத்துக்கொண்டேன், எல்லாம் எழுதி முடிக்க மணியாகிவிட்டது, மறுநாள் நன்றாய் தயார் படுத்திக் கொள்ளலாம் என்று தூங்க போய்விட்டேன். மறுநாள், மதிய உணவு முடித்து, எங்கள் ஆசிரியரிடம் அனுமதி கடிதம் வாங்கி நாங்கள் மூவரும் கிளம்ப தயாரானோம்.
"ரஞ்சித் நல்லா ப்ராக்டீஸ் பன்னிட்டீயா" ஜே.ஜே கேட்டான்
"நோட்ஸ் எடுத்துட்டேன், எல்லாம் அங்க போய் பாத்துக்கெல்லாம், என்ன ஒரு பத்து பேரு வருவாங்களா, இதுக்கெல்லாம் போய் அலட்டிகிட்டு, சரி நீ எப்படி?"
"நானும் ஒன்னும் ப்ராக்டீஸ் பன்னல, என்னடா நீ ப்ராக்டீஸ் செஞ்சியா?" அவன் ப.ஜெ'விடம் கேட்டான்
"இன்னாத்த ப்ராக்டீஸ் பன்ன, அங்க போய் கீசிடலாம்" வழக்கமான ப.ஜே...
ஆக எல்லோரும் கையில் கொஞ்சம்,
தலையில் அதிகம் (தலைக்கணத்தை தான் சொன்னேன்) சரக்கு வைத்துக்கொண்டு நேரே அரசினர் தோட்டம் சென்றோம்.
ஒரு வழியாய் போட்டி நடக்கும் பள்ளியை கண்டு பிடித்து அங்கு சென்றோம். அங்கே எங்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. நாங்கள் நினைத்துபோல் வெறும் பத்து பேர் வரவில்லை, குறைந்தது நூற்று ஐம்பது பேராவது வந்து இருப்பார்கள், முக்கால்வாசி பெண்கள். எல்லோர் கையிலும் பக்கம் பக்கமாக காகிதங்கள், பாரதி கண்ட புதுமை பெண்கள் எல்லோரும் உயிரை கொடுத்து, கொண்டு வந்த காகிதங்களை மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்கள் (ஆண்களை விட, மனப்பாடம் செய்வதில் பெண்களே கெட்டிகாரர்கள் என்பது என் தாழ்மையான என்னம்). இன்னும் போட்டிக்கு சில மணித்துளிகளே இருக்கையில், இந்த காட்சியை கண்டு நாங்கள் கொஞ்சம் அல்ல, நிறையவே அதிர்ச்சியில் இருந்தோம். பாரதியே வந்தாலும் பயந்துதான் போயிருப்பார். அங்கே ஒலிபெருக்கியில் எல்லா மாணவர்களையும் பதிவு செய்ய விளித்து
கொண்டிருந்தார்கள். என் ஞாபகம் சரியாய் இருப்பின், எங்களைப் போல் இரண்டு, மூன்று கோஷ்டிகள் அதிர்ச்சியுடன் காட்சியளித்தனர்.
"மச்சி இப்ப இன்னாடா பன்றது" ப.ஜே ஒன்றும் 'கீசிட'ப் போவதாக பேசவில்லை
"தெரியலடா என்னடா செய்றது... பதிவு செய்ய கூப்பிடறாங்க" ஜெ.ஜெ என்னிடம் கேட்டான்
"சத்தியமா எனக்கு நம்பிக்கை இல்ல, பேசாம ஸ்கூலுக்கு போலாம்" நான் சொன்னேன்.
"ஸ்கூலுக்கு போய் இன்னா சொல்வ... பயந்துகின்னு வந்துட்டோம்னு சொல்லுவியா"
"சரி என்ன செய்யலாம்" நான் ப.ஜெவிடம் கேட்டேன்
"பேசாம ஸ்கூல கட் அடிச்சிகிட்டு இங்க எங்காச்சும் சுத்தலாம்.. நாளைக்கு ஏதாவது சொல்லி சமாளிக்கலாம்" ப.ஜெ யோசனை கூறினான். அவன் எங்கள் இருவரையும் கொஞ்சம் யோசிக்க வைத்தான். பள்ளிக்குச் சென்றாலும், அவன் சொல்வதை போல் ஆசிரியர் எங்களை மெச்சப் போவதில்லை, அப்படியே போனாலும் ஒன்னும்
சொல்லும்படியான வகுப்புகள் இல்லை, சரி வெட்டிவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தோம்.
"இப்ப எங்க சுத்த போறது" ஜெ.ஜெ ப.ஜெவிடம் கேட்டான்.
"உன் கையில காசு இருக்குதா, எதனா படத்துக்கு போவோம்" என் கையில் என் அம்மா பேருந்துக்கு கொடுத்த சில்லறைகள் தான் இருந்தது, அவர்களிடமும் ஒன்றும்
தேறவில்லை. அப்படியே கால் போன போக்கில் அரசினர் தோட்டத்தை சுற்றி வந்தோம், தூரே எம்ஏசி கிரிக்கெட் மைதானம் தெரிந்தது. யாரும் அதற்கு முன்னே கிரிக்கெட் ஸ்டேடியம் பார்த்தது இல்லை, நேரே அதை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். உள்ளே மகளிர் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு மாநிலமும், மற்றொரு மாநிலமும் மோதிக் கொண்டிருந்தன. பார்வையாளர்கள் வரிசையில் எங்களை தவிர ஒரு ஈ காக்கா இல்லை (மகளிருக்கு 33 சதவிகிதம் ஏன் கிடைக்கவில்லயென்று இப்போது தெரிகிறது). ஒரு வழியாய் ஸ்டேடியத்தை நன்றாய் சுற்றி, சுற்றி வந்து, மதிய பொழுதை கழித்து மாலையில் வீடு வந்து சேர்ந்தோம்.
மறுநாள் எங்களை பார்த்து தமிழாசிரியர் ஆர்வத்தோடு ஓடி வந்தார்
"என்னப்பா என்ன ஆச்சு, நல்லா பேசுனீங்களா... முடிவு என்னாச்சு"
"நல்லா பேசுனோம் சார், மூன்று சுற்று வரை வந்தோம், அப்புறம் தோற்றுவிட்டோம் சார்" சொல்லி வைத்தபடியே எல்லோரும் சொன்னோம்.
"அப்படியா.... பரவாயில்லப்பா, ஜெயிக்கிறது முக்கியம் இல்ல கலந்துகிடறது தான் முக்கியம்...கவலைப்படாதீங்க" எங்களை தேற்றினார்.
அவர் மறையும் வரை கவலை தோய்ந்த முகத்தை மாற்றவில்லை, அவர் அறைக்குள் சென்ற பின் எங்களிடம் ஒரு சின்ன சிரிப்பு.
No comments:
Post a Comment